4 வாரங்களுக்கு தடை…
எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவிருந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் B4U என்ற நிறுவனத்திடம் உள்ளது. இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமம் இதுவரை விற்கப்படாத நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டை அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர்.

இதனால் அந்நிறுவனம் ஓடிடி உரிமத்தை விற்க முடியவில்லை. ஆதலால் தனது B4U நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இத்திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்தார். ஆதலால் இத்திரைப்படத்தின் முதல் காட்சி இன்று திரையிடப்படவில்லை.
இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் ரூ.7 கோடியை 24 மணி நேரத்திற்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை தற்போது அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்த நீதிமன்றம் இத்திரைப்படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு மேல் தடை விதித்தது.
நீங்கியது தடை
இந்த நிலையில் B4U நிறுவனமும் தயாரிப்பாளரும் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இப்பிரசன்னைக்கு தீர்வு கொண்டுவர முன்வந்துள்ளதாக ஒரு தகவல் சில மணிநேரங்களுக்கு முன்பு வெளியானது. அதன் படி தற்போது இந்த பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டு இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. மாலை காட்சியில் இருந்து இத்திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.